கொட்டும் மழையில் சசிகலாவுடன் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் ஆசி வாங்கிய ஜெயலலிதா
திருச்சி: கொட்டும் மழையில் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஆசி வாங்கினார்கள்.
காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இதன் ராஜகோபுரம் 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.20 மணிக்கு திருச்சி வந்தனர். ஜெயலலிதாவை விமான நிலையத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ, அமைச்சர் பூனாட்சி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். ஜெயலலிதாவை வரவேற்க திருச்சி விமான நிலையம் பகுதியிலும், சாலை ஓரங்களிலும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர் கார் மூலம் சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.
ஸ்ரீரங்கம் ரங்கா கோபுர வாசலில் ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரங்கநாத பட்டர் மற்றும் நந்து பட்டர் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்பு பேட்டரி கார் முலம் சக்கரத்தாழ்வார், தாயார் மற்றும் மூலவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
மேலும், ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 46வது ஜீயராக புதிதாக பதவியேற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற அகோபில மடத்துக்கு செல்ல அவரும், சசிகலாவும் தயாரானார்கள்.
அப்போது கடும் மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் காரில் ஏறி கீழ வாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு மடத்திற்கு சென்று ஜீயரை சந்தித்து ஆசி பெற்றனர். அத்துடன் முன்னாள் ஜீயர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியதை செலுத்தி பயபக்திடன் வணங்கினர். பின்பு அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டனர்.
முதல்வர் ஜெயலிலதா வருகையை முன்னிட்டு திருச்சி முழுக்க போலீஸ் படை குவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவை காண கொட்டும் மழையில் வரிசையில் காத்துக் கிடந்தனர்.
4வது முறையாக ஸ்ரீரங்கம் வருகை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் 3 முறை திருச்சி வந்து ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் நடந்த அரசு விழாக்களில் பங்கேற்றார். 4வது முறையாக கடந்த 24ம் தேதி அவர் ஸ்ரீரங்கம் வருவதாக தகவல் வெளியாகின. ஸ்ரீரங்கம் சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கும் பணி துவங்கியது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள ஸ்ரீரங்கம் வந்து, மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். பின்னர் முதல்வரின் வருகை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அவர் நேற்று ஸ்ரீரங்கம் வந்தார்.