தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண்!
சென்னை: எஸ்எஸ்எல்சியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களே அதிக தேர்ச்சியை அடைந்துள்ளனர், அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகப்படுத்தி வரும் இந்த சூழலில் இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் தமிழை ஒரு பாடமாகவும், ஆங்கிலம் தவிர பிற பாடங்களை தமிழ் வழியிலும் படித்தவர்கள். மற்ற மூன்று லட்சம் மாணவ மாணவிகளில் 90 சதவீதம் பேர் தமிழை ஒரு மொழியாக எடுத்துப் படித்தவர்கள்.
இவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதலிடம் பெற்ற மாணவிகள், இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற மாணவ மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வழியில் படித்தவர்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகள் 490க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப் படிப்பை தாய்மொழியில் படிக்கும்போது, மனப்பாட முறையைத் தாண்டி, சிந்திக்கும் திறன் மாணவ மாணவிகளுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. சொந்த மொழி நடையில் எழுதும் பாங்கும் அமைகிறது என்பதையே இது காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.