அமைச்சரை முற்றுகையிட்ட நோயாளிகள்: தூத்துக்குடி மருத்துவமனையில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அவசர சிகிச்சைப்பிரிவை தொடங்கி வைக்க வந்த அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கனவே அவசர சிகிச்சை பிரிவு பகுதி மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் இயங்கி வந்தது. ஆனால், அது நோயாளிகளுக்கு வசதியாக இல்லை என்பதால், அதனை மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று அது திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ முன்னிலையில் நடை பெற்றது. விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்.
திறப்பு விழா முடிந்து, செய்தியாளர் சந்திப்புக்குப் பின் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.த.செல்லப்பாண்டியனை, யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயாளிகளும், பொதுமக்களும் சுற்றி வளைத்தனர்.
சுகாதார வசதிகள் மற்றும், பிரசவ வார்டில் தண்ணீர் வரவில்லை என்று மருத்துவமனை குறித்து அடுக்கடுக்கான புகார்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். பதிலளிக்க இயலாமல் அமைச்சரும், அவரின் சகாக்களும் சிறிதுநேரம் திணறிப் போனார்களாம்.
மருத்துவக் கல்லூரியின் முதல்வர் எட்வின் ஜோவிடம் குறைகளை உடனடியாக களையுமாறு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை செய்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
சில தினங்களுக்கு முன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்துவிட்டு சென்ற பின் இவ்வாறு மற்றொரு அமைச்சர் சிறை பிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.