மும்பைவாசிகளுக்கு அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறதாம்: கணக்கெடுப்பில் தகவல்
மும்பை: விபத்துகளால் நேரிடும் இறப்புகளை விட, மாரடைப்பால் மரணமடைபவர்கள் மும்பையில் அதிகம் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், 2012-ம் ஆண்டு மும்பையில் நடந்த இறப்புகள் குறித்த புள்ளி விவரங்களை மும்பை நகராட்சி வெளியிட்டது. இதில் சாலை விபத்து, தீ விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பை நகரில் மாரடைப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என தெரிய வந்திருப்பதாக கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக மரணங்கள் ‘ஹார்ட் அட்டாக்’ தான்...
2012-ம் ஆண்டு மட்டும் மும்பையில் இறந்தவர்களில், குறிப்பாக இதய நோய் மற்றும் மாரடைப்பு காரணங்களால் மட்டும் 25 ஆயிரத்து 474 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற இறப்புக்களை ஒப்பிடும் போது இது மிக அதிகம் என்று மும்பை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்...
மாரடைப்பு உயிரிழப்பை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரங்களால் ஓரளவு பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
அதிகரிக்கும் விபத்துகள்...
மும்பையில் 2012 ஆண்டும் இறந்தவர்களில் 14 பேரில் ஒருவர் விபத்து காரணமாக உயிரிழந்ததாகவும் மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. அந்த ஆண்டு மட்டும் விபத்தில் 6 ஆயிரத்து 164 பேர் உயிரிழநதுள்ளனர்.