15ம் தேதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றம்: இது தான் கடைசி மாற்றம்?
மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,
உணவு பாதுகாப்பு மசோதா, தெலுங்கானா விவகாரம் குறித்து கட்சி கவனம் செலுத்தி வருகிறது. வரும் 15ம் தேதிக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் கடைசி அமைச்சரவை மாற்றம் இதுவாகத் தான் இருக்கும். சில அமைச்சர்களுக்கு கட்சி பணி அளிக்கப்படும். இது குறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆலோசனை நடத்தினர் என்றார்.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸுக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெற்றது. இதையடுத்து அக்கட்சி அமைச்சர்கள் 5 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மத்திய ரயில்வே அமைச்சர் பன்சால் லஞ்ச விவகாரம் தொடர்பாக தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமாசெய்தார். மேலும் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக அஷ்வனி குமார் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரயில்வே துறை சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சி.பி. ஜோஷியிடமும், சட்டத் துறை தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலிடமும் ஒப்படைக்கப்பட்டது.