குருநாத், விண்டு போலீஸ் காவலை நீட்டிக்க நீதிபதி மறுப்பு! 14-ந் தேதி வரை நீதிமன்றக் காவல்!!
பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பாலிவுட் நடிகர் விண்டு தாராசிங் ஆகியோரது போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்கள் இருவரும் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரது போலீஸ் காவலை மீண்டும் நீட்டிக்கக் கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் வரும் 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் மும்பை ஆர்தர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் சிறைக்கு கொண்டு செல்லப்ப்ட்டதால் இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
தொடரும் புக்கி கைது
இதனிடையே மும்பையில் இன்றும் ஒரு பிக்ஸிங் புக்கி சிக்கியிருக்கிறார். கைது செய்யப்பட்ட புக்கி கிஷோர் பத்லானி, புனே நகரை சேர்ந்தவர். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் முக்கிய புக்கியாக அவர் செயல்பட்டிருக்கிறார். ஐரோப்பிய நாட்டுக்கு சென்று திரும்பிய அவரை விமான நிலையத்தில் மும்பை போலீசார் மடக்கி கைது செய்தனர்.