மெய்யப்பனும், வின்து தாரா சிங்கும் இன்று ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா?
மும்பை: ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும், வின்து தாரா சிங்கும் இன்று மகிழ்ச்சியாக இருப்பதன் காரணம் தெரியுமா?
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பை போலீசார் மெய்யப்பனை கைது செய்தனர். போலீஸ் காவலிலில் வைக்கப்பட்ட மெய்யப்பன் மற்றும் வின்துவை மேலும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மும்பை போலீசாரின் மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார். மேலும் அவர்கள் இருவரையும் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஆர்தர் ரோடு சிறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இத்தனை நாட்கள் போலீஸ் காவலில் இருந்ததால் ஜாமீன் கோர முடியாமல் இருந்தது. இந்நிலையில் நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவர்கள் இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.