டிரைவர், உங்க பஸ் ‘டயர்’ கழண்டு ஓடுது பாருங்க...: சங்கரன்கோவிலில் களேபரம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அரசு பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் டயர் கழன்று ஓடியதால் பயணிகள் பீதிக்கு ஆளானார்கள்.
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், நேற்று காலை சுரண்டைக்கு செல்வதற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. கிட்டத்தட்ட பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பேருந்தின் முன்பக்க இடது டயர் திடீரென்று கழன்று ஓடியது.
சக்கரம் கழண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சுதாரித்த டிரைவர் பதறாமல், உடனடியாக பிரேக் போட்டார். இதனால் பேருந்து பாதுகாப்பாக நின்றது.
டிரைவரின் சம்யோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பின்னர் மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓடும் பேருந்தில் சக்கரம் கழண்டது, படிக்கட்டு கழண்டது என்பன போன்ற செய்திகள் அடிக்கடி நாம் கேள்விப்படும் ஒன்றுதான். சரியாக பேருந்துகளின் நிலையை ஆராயாமால் இது போன்று பயணிகளின் உயிரோடு விளையாடுவது சரியா? நிர்வாகம் தான் தீர்வு சொல்ல வேண்டும்.