60 லட்சத்தை ஆற்றில் தவறவிட்ட வங்கி ஊழியர்
வியன்னா: வங்கியில் செலுத்த கொண்டு சென்ற 60லட்சம் பணத்தை ஆற்றில் தவற விட்டார் ஆஸ்திரியா நாட்டு வங்கி ஊழியர் ஒருவர்.
ஆஸ்திரியா நாட்டில் உள்ள பிரபல வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றார். கிட்டத்தட்ட ரூபாய் 60 லட்சம் கையில் வைத்திருந்திருக்கிறார்.
எதிர்பாராத விதமாக ஆற்றங்கரையில் வைத்து அவரின் கார் பஞ்சராகி விட்டது. காரை பழுது பார்ப்பதற்காக பண மூட்டைகளை கீழே இறக்கி வைத்துள்ளார். மலைப்பாங்கான இடமாக இருந்ததால், மூட்டைகள் சரிவில் ஓடி ஆற்றில் விழுந்து விட்டது.
வேலையில் தீவிரமாக இருந்த ஊழியர் தாமதமாகவே இதை கவனித்துள்ளார். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் தேடுதல் வேட்டையில் குதித்தனர்.
ஆனால், தீவிர தேடுதலுக்குப் பின்னரும் வெறும் 2 லட்சம் ரூபாயை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. மீதிப்பணம் முழுவதும் ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பணம் கிடைத்தால் உடனடியாக ஒப்படைக்கும் படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில், வங்கி ஊழியர் மீது ஏதும் சந்தேகம் எழவில்லை என்றும், ஆனபோதும் கவனக்குறைவாக இருந்தது அவரின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.