பாரீஸில் அரிய வகை குர்ஆன் ஏலம்: தடுத்து நிறுத்த யுனெஸ்கோவுக்கு எகிப்து இமாம் கோரிக்கை
பாரீஸ்: பாரீஸில் 19ம் நூற்றாண்டு குர்ஆனை ஏலத்தில் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எகிப்து இமாம் அகமது எல் தையப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அல் அசார் மசூதியில் கையால் எழுதப்பட்ட 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த குர்ஆன் ஒன்று இருந்தது. கெய்ரோ நகரை பிரெஞ்சு படைகள் தாக்கியபோது அதில் இருந்தும், தீயில் இருந்தும் அந்த குர்ஆன் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் அந்த குர்ஆன் மாயமானது. 1970ம் ஆண்டுக்கு முன்பு அந்த குர்ஆன் எகிப்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநதர் பாரீஸில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் வரும் 9ம் தேதி அந்த குர்ஆன் ஏலத்தில் விடப்படுகிறது. இந்த ஏலத்தை தடுத்து நிறுத்துமாறு எகிப்து இமாம் அகமது எல் தையப் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது காமில் அலி அமர், யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகோவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பழமை வாய்ந்த குர்ஆன் சட்டப்பூர்வமாகத் தான் எகிப்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி, குர்ஆனை மீட்கும் முயற்சியில் எகிப்து இறங்கியுள்ளது.