ராமருக்கு இந்தியாவிலயும்,சீதைக்கு இலங்கையிலயும் கோவில் கட்டுவோம் : பாஜக
கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பாரதீய ஜனதாவின் ஆட்சிதான் மத்திய பிரதேசத்தில் நடை பெற்று வருகிறது. விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில், இம்முறையும் தாங்களே அரியணையில் அமர தீவிர முயற்சியில் உள்ளனர்.
இந்நிலையில், பிரசார வியூகங்கள் குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் மாநில பாஜ தலைவர்களின் 3 நாள் மாநாடு நேற்று முன்தினம் குவாலியரில் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட சிவ்ராஜ் பேசியதாவது,
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ம.பி. வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதா தேவி தனது கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட இலங்கை அதிபரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என தேசிய அளவில் பாஜக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.