உறவினர் லஞ்ச விவகாரம்: முன்னாள் அமைச்சர் பன்சாலுக்கு சி.பி.ஐ சம்மன்
பவன்குமார் பன்சாலின் மருமகனான விஜய் சிங்கலாவிடம், ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் இடைத்தரகர் மூலம் 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தபோது சி.பி.ஐ.யால் செய்யப்பட்டார். இந்த வழக்கில், விஜய் சிங்லா, மகேஷ்குமார், சந்தீப் கோயல், மஞ்சுநாத் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருமகன் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பவன்குமார் பன்சால்.
இதனிடையே, லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகி உள்ள ரயில்வே போர்டு உறுப்பினருடனான சந்திப்பு குறித்து பவன்குமார் பன்சாலிடம் சிபிஐ விசாரணை நடத்தும் எனத் தகவல்கள் வெளியானது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பவன்குமார் பன்சால் மும்பை சென்ற போது மகேஷ்குமார் அவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நடந்த இரு வாரத்திற்குள்ளாக மகேஷ்குமார் ரயில்வே போர்டில் முக்கிய பொறுப்பிற்கு வந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் இன்று பன்சால் சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.