20 வயதுப் பெண்ணுடன் 50 வயது எஸ்.ஐ தொடர்பு.... கொந்தளித்த மகன் பெண்ணைக் கொன்றார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 20 வயதுப் பெண்ணுடன் தனது 50 வயது தந்தை உறவு வைத்திருந்ததால் கொதிப்படைந்த மகன், அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
கொலை செய்யப்பட்ட பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா 20 வயதாகிறது.
இவர் சின்ன காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் 26 வயதான ரஞ்சித் குமார் என்பவர் சிக்கினார். அவர்தான் கொலையாளி என்ற விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து ரஞ்சித் குமாரைப் போலீஸார் கைது செய்தனர். அப்போது ரஞ்சித் குமார் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஞ்சித்குமாரின் தந்தை வேல்முருகன். 50 வயதான இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஓரகடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். முன்பு உத்திரமேரூரில் பணியாற்றினார். அப்போது ஒரு வழக்கு தொடர்பாக அவரைப் பார்க்க ரம்யா வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.அடிக்கடி சந்தித்து உறவும் கொண்டு வந்தனர். வேல்முருகனிடம் முழுமையாக நெருங்கி விட்ட ரம்யா தனக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்கவே அவரும் சரி என்று கூறி பல இடங்களில் வைத்து பாலியல் ரீதியாக ரம்யாவைப் பயன்படுத்தி வந்துள்ளார். கடைசியில் அவருக்கு ஓரகடத்திற்கு இடமாற்றம் ஏற்படவே சின்னகாஞ்சிபுரத்தில் ரம்யாவை வீடு எடுத்துத் தங்க வைத்தார்.
இந்த நிலையில் வேல்முருகன் வீட்டில் ரம்யா விவகாரம் தெரிய வரவே வீட்டினர் கொந்தளித்தனர். வேல்முருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது. அதில் இருவரும் தற்கொலைக்கும் முயன்றனர். பிள்ளைகள் குறுக்கிட்டு தடுத்துள்ளனர்.
தனது தந்தையின் கெட்ட சகவாசத்தால் பிரச்சினை ஏற்படுவதை அறிந்து வேதனையுற்ற மகன் ரஞ்சித் குமார், ரம்யாவிடம்வந்தார். தனது தந்தையை விட்டு விலகிப் போய் விடுமாறு மிரட்டியுள்ளார். பதிலுக்கு ரம்யா சண்டை பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் ரம்யாவை சரமாரியாகக் குத்திக்கொலை செய்தார்.
போலீஸார் ரஞ்சித்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரஞ்சித் குமாருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.