வங்கதேசத்திலும் மேட்ச் பிக்ஸிங் .. மாஜி கேப்டன் முகம்மது அஷ்ரபுல் சஸ்பெண்ட்
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் உலகை ஸ்பாட் பிக்ஸிங் கலக்கி வரும் நிலையில் தற்போது வங்கதேசத்தை மேட்ச்பிக்ஸிங் புகார்கள் சூறாவளியாக சுற்ற ஆரம்பித்துள்ளன.
அஷ்ரபுல் சஸ்பெண்ட் குறித்து வங்கதேச கிரிக்கெட்வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிபிஎல் போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஊழல் எதிர்ப்பு மற்று் பாதுகாப்புப் பிரிவிடம் ஒத்துக் கொண்டுள்ளார் அஷ்ரபுல். எனவே விசாரணை முடிந்து முழு அறிக்கை வெளியாகும் வரை அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து அஷ்ரபுல்லிடம் நான் பேசியபோது, அவர் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டார் என்றார்.
பிபிஎல் தொடரில் பங்கேற்ற டாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் சிட்டகாங் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மேடச் பிக்ஸிங் நடந்தது. இதில் அஷ்ரபுல் தொடர்பு கொண்டிருந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
இந்தப் போட்டியில் டாக்கா அணி தோல்வி அடைவதற்காக 12,800 அமெரிக்க டாலர் பணத்தை அஷ்ரபுல் பெற்றார் என்பதும் குற்றச்சாட்டாகும். இதற்காக அவருக்கு செக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் என்ன கொடுமை என்றால் அந்த செக் பவுன்ஸ் ஆகி விட்டதுதான்.
மேலும் பரிசல் பர்னர்ஸ் அணியுடனான போட்டியின்போதும் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளார் அஷ்ரபுல்.
வங்கதேச அணியில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் அஷ்ரபுல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 முதல் 2009 வரை அவர் வங்கதேச அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2737 ரன்களை அஷ்ரபுல் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் அடஙகும். அதேபோல 177 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 3468 ரன்கள் எடுத்துள்ளார் அஷ்ரபுல்.
2012ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் பிபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.