பிக்சிங்: சிபிசிஐடி முன்பு ஆஜராக அவகாசம் கேட்ட சென்னை ஹோட்டல் அதிபர்: மனைவி மனு தாக்கல்
சென்னை: ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளார் சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால். இதற்கான மனுவை சிபிசிஐடி முன்பு ஆஜரான அவரது மனைவி வந்தனா இன்று தாக்கல் செய்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூதாட்டத்தில் தொடர்புள்ளதாக ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து விசாரணைக்காக கடந்த 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விக்ரம் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சம்மனை நிராகரித்த விக்ரம் அகர்வால் குறிப்பிட்ட தேதியில் சி.பி.சி.ஐ.டி முன் ஆஜராகவில்லை.
அதற்குப் பதிலாக மே 31ஆம் தேதி மும்பை போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் அவர் சாட்சியாக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு பதில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த விக்ரம் அகர்வால் மனைவி வந்தனா, தனது கணவர் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தார்.
அவகாசம் கேட்டு மனு
இதனிடையே, கணவர் விக்ரம் அகர்வால் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டு அவரது மனைவி வந்தனா, சிபிசிஐடி போலீசிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விக்ரம் அகர்வாலுக்கு உடல் நிலை சரியில்லை என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை அவரது வழக்கறிஞர் கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ளார்.