நாகப்பட்டினம்: கோடியக்காட்டில் மான் வேட்டையாடிய வாலிபர் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கோடியக்காட்டில் மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு பசுமைமாறா காடு ஆகும். இங்கு பறவைகள் சரணாலயம், வன விலங்குகள் சரணாலயம் ஆகியவை உள்ளது. அங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு சீசன் சமயத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
விலங்குகள் சரணாலயத்தில் புள்ளி, வெளிமான் உள்ளிட்ட அரியவகை மான்கள், நரி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த சரணாலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வனவர் இளங்கோவன் தலைமையில் வன ஊழியர்கள் கோடியக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்.
வன அலுவலர்களை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களில் ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரது பெயர் கார்த்திகேயன் (30) கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் 3 பேரும் துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடியது தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் படி வனத்துறையினர் துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தை கத்தியால் அறுத்த நிலையில் இறந்து கிடந்த மான் உடலை மீட்டனர். கார்த்திகேயனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய கோவிந்தன், சோமு ஆகியோரை தேடி வருகின்றனர்.