வயிறு வீங்கி மான் செத்ததன் எதிரொலி: வண்டலூர் பூங்காவில் வெளி உணவுப்பொருட்களுக்கு தடை
சென்னை: சென்னை வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் கொண்டு வரும் வெளி உணவு பொருட்களை, பூங்காவின் உள்ளே கொண்டு செல்ல நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உயிரினங்களைப் பார்வையிட வரும் பொதுமக்களால் சில சமயங்களில் உயிரினங்களுக்கு ஆபத்துகளும் ஏற்படுகிறது. அதைத் தடுக்கவே இந்த தடை என விளக்கமளிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தடையால் பாவம் பார்வையாளர்கள் நிலை தான் பரிதாபமாகியுள்ளது. அவ்வளவு பெரிய பூங்காவை சுற்றி வரும் போது இடையில் சாப்பிடுவதற்காக என்று வெளியில் வர முடியாமல் கொலைப்பசியோடு சுற்றுகின்றனர்.
பிளாஸ்டிக் பையை சாப்பிட்ட மான்...
சமீபத்தில் நோய்வாய்பட்டு, வயிறு வீங்கி இறந்த மான் ஒன்றினை பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் வயிற்றுக்குள் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாட்டிலை கடித்த நீர்நாய்...
இதேப்போல், நீர் நாய் ஒன்றும், பொதுமக்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை கடித்த போது, அது வாயில் சிக்கிக் கொள்ளவே, மிகுந்த சிரமத்துக்குள்ளானது.
உங்க இரக்க சுபாவத்திற்கு அளவே இல்லையா...
ஆர்வக்கோளாறில், பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களை விலங்குகளுக்கு அளித்து விடுகின்றனர். அவை வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் விலங்குகள் வயிற்றுப் போக்கால் அவதிப் படும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
சொந்த சாப்பாட்டிற்கே டோக்கன்...
இவற்றைக் கருத்தில் கொண்டு தான் இந்த புதிய தடை அமல் படுத்தப் பட்டிருப்பதாக தெரிகிறது.. எனவே, வண்டலூர் பூங்காவுக்கு செல்லும் பார்வையாளர்கள், தங்களது உணவுப் பையை, நுழைவாயிலில் ஒரு டோக்கன் பெற்றுக் கொண்டு வைத்துவிட்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசலிலேயே சாப்பாடு....
உணவு சாப்பிட வேண்டும் என்றால், மீண்டும் அப்பகுதிக்கு வந்த உணவு பையை வாங்கி அங்கே சாப்பிட்டுவிட்டு மீண்டும் பையை அங்கேயே ஒப்படைத்துவிட்டு மீண்டும் பூங்காவுக்குள் செல்ல வேண்டுமாம்.
நல்ல விதி விலக்கு....
விதிவிலக்காக, குழந்தைகளுக்கான உணவு மற்றும் குடிநீர் மட்டும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளிசட்னியா?
விலங்குகளின் நன்மைக்காக என இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது சந்தொஷம் தான். ஆனா, உள்ளே கேண்டீன், ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் என வாட்டர் பாட்டில்கள், பிற உணவுப் பொருட்கள் விற்பனை களை கட்டுகிறதே அந்தக் கொடுமையை என்ன சொல்ல..?