ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக ரூ 3 லட்சம் மோசடி - இதுதான் 'பாஸ்' மீதான புகார்!
கடலூர் மாவட்டம், கொண்டூரைச் சேர்ந்தவர் சாரங்கபாணி. இவர் சிவில்சப்ளை நிறுவனத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அ.தி.மு.க. பிரமுகரான இவரது தங்கை மகள் சுமதி பி.எஸ்சி.,பிஎட். ஆசிரியை வேலைக்கு படித்துள்ளார்.
சுமதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 31- ந் தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், "நான் ஆசிரியை வேலைக்கு முயற்சித்து வருகிறேன். கடந்த 2002-ம் ஆண்டு, எனக்கு ஆசிரியை வேலை வாங்கித்தருவதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த பருத்தி சேகர் (வயது 50), இளம்வழுதி (30) ஆகியோர் ரூ.5 லட்சம் பணம் கேட்டனர்.
நாங்கள் முதல் தவணையாக ரூ.3 லட்சம் கொடுத்தோம். அடுத்து வேலை கிடைத்ததும், மீதி ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து இருந்தோம். பாஸ்கரன் என்பவரிடம் இந்த பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆசிரியை வேலை எனக்கு வாங்கித்தரவில்லை. வாங்கிய ரூ.3 லட்சம் பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த பணத்தை திருப்பித்தரவில்லை. இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனு தொடர்பாக மோசடி, கொலை மிரட்டல் மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபச்சார தடுப்பு போலீஸ் நிலையத்தில் விசாரணை!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பகல் 12 மணி அளவில் பாஸ்கரன், ஒரு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு ஆலந்தூர் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் வேனில் ஏற்றியபோது, வெளியே திரண்டு நின்றிருந்த பாஸ்கரனின் ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தி கோஷம் போட்டார்கள்.
பிற்பகலில் பாஸ்கரன் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.