காமன்வெல்த் முறைகேடு: சுரேஷ் கல்மாடியிடம் மீண்டும் விசாரணை நடத்துகிறது சிபிஐ!
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த ஆண்டு சுரேஷ் கல்மாடி மற்றும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியதோடு வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக இந்த வாரத்தில் சுரேஷ் கல்மாடியை நேரில் அழைத்து விசாரிக்கப் போவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொரீஷியஸ் ஒப்பந்தங்கள்
2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்காக மொரீஷியஸை சேர்ந்த இகேஎஸ் என்ற நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.
ஷுங்லு கமிட்டி
இந்த ஒப்பந்தங்கள் சர்சைக்குள்ளானது. இதுகுறித்து விசாரிக்குமாறு ஷுங்லு கமிட்டியை பிரமதர் மன்மோகன் சிங் நியமித்தார். ஷுங்லு குழுவும் ஒப்பந்தத்துக்கு நிறுவனங்களைத் தேர்வு செய்த விதமே வேடிக்கையாக உள்ளதாக அறிக்கையில் சாடியிருந்தது. நிறுவனத் தேர்வு என்பது கண்துடைப்புக்காக நடத்தப்பட்டதாகவும் அது விமர்சித்திருந்தது.
மீண்டும் சிபிஐ விசாரணை
ஏற்கெனவே காமன்வெல்த் போட்டி ஏற்பாடு தொடர்பாக பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள கல்மாடியிடம் தற்போது இந்த மொரீஷியஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்த முறைகேடு குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கின்றனர்.