தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
வாடகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் செய்யும் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னையில் 351 ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் பல பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயரும் டீசல் விலைக்கு ஏற்ப, வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும், 5 மாதங்களாக உயர்த்தித்தரப்படாத வாடகைத் தொகையை உடனே வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
சென்னையில் ஏற்கனவே கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் விநியோகம் செய்யும் ஒப்பந்த லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.