சீக்கியர்கள், இந்துக்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்கவிருக்கும் எஃப்.பி.ஐ.
வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின், ஓக் கிரீக்கில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகி 10 மாதங்கள் கழித்து சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் அரபியர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எஃப்.பி.ஐ. கண்காணிக்கவிருக்கிறது.
அமெரிக்காவின் வெர்ஜினியா, போர்ட்ஸ்மவுத்தில் நேற்று எஃப்.பி.ஐ. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்கா முழுவதும் நடக்கும் இனவெறி தாக்குதல் குறித்த போலீசாரின் தகவல்களில் இரண்டு மத குழுக்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல் மற்றும் சீக்கியர்கள், இந்தியர்கள், அரபியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீக்கியர்கள், இந்தியர்கள், அரபியர்களுக்கு எதிரான குற்றங்களை எஃப்.பி.ஐ. கண்காணிக்கும்.
இந்த முடிவு வரும் 2015ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். இந்த முடிவை சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் அரபியர்கள் வரவேற்றுள்ளனர். இனி சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் அரபியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து உள்ளூர், மாநிலம் மற்றும் பெடரல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம்.
இந்த புதிய நடைமுறை மூலம் இனவெறி தாக்குதல்கள் குறித்த வழக்குகள் கண்டுகொள்ளப்படாமல் இருக்காது. மேலும் சட்ட அதிகாரிகளிடையே மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.