3 வருடத்தில் ரூ. 1 கோடிக்கு பெட் கட்டி நஷ்டமடைந்தார் ராஜ் குந்த்ரா - போலீஸ்
தனது சொந்த அணியின் மீதும், பிற அணிகள் மீதும் இந்த சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டதாக டெல்லி போலீஸார் கூறுகிறார்கள். இருப்பினும் தனது நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அமைதியாக இருப்பதால் குற்றவாளி என்று சொல்லி விட முடியாது. வாய்மையே வெல்லும் என்றும் ராஜ் குந்த்ரா விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் கூறுகையில், இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ராஜ் குந்த்ரா, பெட்டிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கவில்லை. மாறாக பெரும் நஷ்டத்தையே சந்தித்துள்ளார் என்றார்.
தற்போது ராஜ் குந்த்ராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.