எஸ்.ஐ.ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கொக்கி குமார் மரணம்
திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காட்டை சேர்ந்தவர் "கொக்கி' குமார், 26. கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வேம்பத்தூரில், எஸ்.ஐ., ஆல்வின்சுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடையவர். இவர் மீது, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் உள்ளன. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான கொக்கி குமார் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
கொக்கி குமாரும் அவரது கூட்டாளிகளும், ஆல்வின் சுதன் கொலை வழக்கு தொடர்பாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. உச்சக்கட்டமாக புதுக்குளத்தை சேர்ந்த பில்லாத்தியான் என்பவரை சில தினங்களுக்கு முன்பு சராமாரியாக வெட்டினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பில்லாத்தியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளிவந்த ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்கவே, அவர்களைக் கண்காணிக்க திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. துரைசிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டபோது மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தில் பிரபல ரவுடி நல்லுச்சாமி, குபேந்திரன் உள்ளிட்ட 4 பேரை நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து திருப்பாச்சேத்தி அருகே ரயில்வே டிராக் அருகே கொக்கி குமாரை வழிமறித்தனர். அப்போது போலீசாரைக் கண்ட உடன் ஓட முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்த போது முதுகில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றான். உடனே போலீசார் கொக்கி குமாரை கைது செய்து திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.
திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த டி.எஸ்.பி வெள்ளைத்துரை கொக்கி குமாரிடம் விசாரணை செய்தார். இதனையடுத்து மானாமதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கொண்டு சென்ற போது கொக்கிக் குமாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்பாச்சேத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடல் நிலை மோசமடையவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் கொக்கி குமார் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு, பாரதி ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கொக்கிக் குமார் நேற்று மரணமடைந்துவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.