அதெப்படி ஆர்.டி.ஐ.கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவரலாம்?: கொந்தளிக்கிறார் பிரகாஷ் காரத்!
இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், அரசியல் கட்சிகளை பொது அமைப்புகள் என்றும் மறைமுகமாக அரசின் நிதியுதவியைப் பெறுகின்றன என்றும் ரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உள்பட்டவை என்றும் தகவல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டபோது அதை நாங்கள் வரவேற்றோம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள மத்திய தகவல் ஆணையத்தின் அறிவிப்பு அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்ட நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது. அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் அல்ல. அரசு அமைப்புகளும் அல்ல. மக்களுக்கான ஓர் அமைப்பு.
இந்த நிலையில் மத்திய தகவல் ஆணையத்தின் அறிவிப்பு தவறான முன்னுதாரணத்துக்கு வழி வகுத்துவிடும். மேலும் அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்கள் போன்றவற்றை மற்ற கட்சிகள் எளிதாக அறிந்துகொள்ளவும் வழிவகுக்கும். இதனால் பழிவாங்கும் அரசியல் போக்கு அதிகரிக்கும். ஜனநாயக நாட்டில் யாரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத்தான் உண்டு. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்கக் கூடாது என்பது மக்களுடைய உரிமை. ஆனால் மத்திய தகவல் ஆணையத்தின் அறிவிப்பு, அந்த அமைப்பு வரம்பு மீறி செயல்படுவதையே காட்டுகிறது.
இதனால் இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்; அரசியல் கட்சிகளின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்