குருநாத் மெய்யப்பன் பாணியில் குந்த்ரா மீது நடவடிக்கை- சொல்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்!
குருநாத்தும் சென்னை அணியும்
ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் முதலில் சிக்கிய வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள்..பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். அவர் சிக்கியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குருநாத் மெய்யப்பனுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
குந்த்ராவும் ராஜஸ்தான் அணியும்
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ராஜ் குந்த்ரா சிக்கியிருக்கிறார். குருநாத் மெய்யப்பன் விவகாரத்தில் எப்படி சென்னை அணி நிர்வாகம் செயல்பட்டதோ அதே பாணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் செயல்பட்டிருக்கிறது. நேற்று அந்த அணி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் அணியின் பங்குதாரர்களில் ராஜ் குந்தராவும் ஒருவர். அவருக்கு அணியில் 11.7% பங்குகள் உள்ளன. அணி செயல்படுவதில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. விதிகளுக்கு புறம்பாக அவர் செயல்பட முடியாது. விதிகளை மீறியிருந்தால் அவர் அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், அவர் தனது பங்குகளையும் இழப்பார் என்று கூறியுள்ளது.
எல்லாருமே சிக்கும் வரை அணியின் உரிமையாளர்கள்தான்..சிக்கிவிட்டால் சம்பந்தமே இல்லை என சத்தியம்தான்!