தென்மேற்குப் பருவமழை தீவிரம்... குற்றாலத்தில் வெள்ளம்... அருவிகளில் குளிக்கத் தடை
குற்றாலம்: தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதியே தொடங்கிவிட்டது. இப்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்தமழைப் பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் மட்டுமே குற்றாலத்தில் சீசன் காலமாகும்.
தொடங்கிய சீசன்
இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய உடன் குற்றாலம்,ஐந்தருவி,பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி வந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
அருவிகளில் வெள்ளம்
இந்நிலையில் நேற்றும்,முன் தினமும் வனப் பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் உள்ளிட்ட அணைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
பயணிகள் ஏமாற்றம்
அதேபோல் ஐந்தருவியில் இன்றுகாலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இதனால் அங்கும் குளிக்க தடை விதிக்கப் பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மழை சாரலில் நனைந்து அருவியில் எப்போது வெள்ளம் குறையும் ஆனந்தமாய் குளிக்கலாம் என்றும் அருவிக்கரையில் காத்து நிற்கின்றனர்.