தமிழகத்தில் மீண்டும் சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி.. ஜெ. கடும் கண்டனம்
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் பண்டார தசநாயகே, மேஜர் ஹரீஸ் சந்திரா ஹெட்டியாராய்ச்சி, ஆகியோருக்கு நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ந் தேதி தொடங்கிய பயிற்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஏவிவிட்டுள்ள கொடூரங்கள் நீடித்து வருவதால் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உள்ளது. இந்த உணர்வுப்பூர்மான நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை அழைத்து பயிற்சி அளிப்பது கடும் அதிர்ச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
நான் ஏற்கனவே 16-7-2012, 25-8-2012, 28-8-2012 ஆகிய தேதிகளில் உங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் அளித்த பயிற்சி தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை குறிப்பிட்டு இருந்தேன். இது தமிழகம் தழுவிய மிக கடுமையான உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இலங்கையில் அப்பாவி தமிழர்களை இன ஒழிப்பு செய்யும் நடவடிக்கைகள் நீடித்து வருவதாலும், மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாலும், இந்திய தமிழ் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல் நீடித்துக் கொண்டு இருப்பதாலும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது.
இது தொடர்பாக நாங்கள் பலமுறை எங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபையிலும், கண்டன தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். இவ்வளவு கடுமையாக எதிர்ப்புக்கு மத்தியிலும், அதை கண்டு கொள்ளாமல் தமிழ்நாட்டின் உணர்வுகளையும், கோபத்தையும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி அளிக்க அனுமதித்து இருக்கிறீர்கள்.
27-ந் தேதியில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி இலங்கை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள உணர்வை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சிகளை நாங்கள் புரிந்து வைத்து உள்ளோம். தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஏ.கே. அந்தோணி கூறியிருக்கிறார். அவருடைய பேச்சை அவரது துறையே மீறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான விஷயத்தில் மத்திய அரசு இட்டை வேடம் போடுகிறது. எங்களை ஏமாற்றுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இதை சொல்லிக் கொள்வதற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 அதிகாரிகளையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான கொள்கையை பின்பற்ற வேண்டும். எனவே இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோ, ஒத்துழைப்பு கொடுப்பதோ நடக்க கூடாது. இலங்கை அரசு அங்கு முற்றிலுமாக தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரையிலும், தமிழ்நாடு மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையிலும் அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க கூடாது. இதில் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.