மாநிலங்களவை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நியமனம்
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான பார்வையாளராக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை பரிசீலிப்பது, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி போன்றவை தேர்தல் பார்வையாளரின் முன்னிலையில் நடைபெறும்.
தேர்தலில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் போன்றவை அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியை தேர்தல் பார்வையாளர் மேற்கொள்வார்.
தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவைத் தேர்தல் பார்வையாளருமான பிரவீண் குமார் அனுப்பி வைப்பார் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் யார்? மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனும், உதவி தேர்தல் அதிகாரியாக, சட்டப் பேரவை இணைச் செயலாளரான பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் இல்லாத நேரத்தில், உதவித் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் அதிகாரிகளிடம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) காலை 11 முதல் மாலை 3 மணி வரை உரிய ஆவணங்களுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 17-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் வாக்கெடுப்பு அவசியமாக இருந்தால், சட்டப் பேரவையின் குழுக் கூட்ட அறையில் வாக்குச் சாவடி அறை ஏற்பாடு செய்யப்படும். வரும் 27-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.