ராஜ்சபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது- மதியம் வரை யாருமே மனு தாக்கல் செய்யவில்லை
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), திருச்சி சிவா (திமுக), இளவரசன் (அதிமுக), மைத்ரேயன் (அதிமுக), டி.ராஜா (சிபிஐ) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை சென்னையில் துவங்கியது. ஆனால் மதியம் வரை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாளாகும். 18ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற வரும் 20ம் தேதி கடைசி நாளாகும்.
வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கும். அதன் பிறகு மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.