கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
பத்தனம்திட்டா: கேரளாவில் கொட்டும் மழையில் வனப்பகுதியில் கர்ப்பிணி மனைவிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவரை கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கியபடி ஓடி வந்த கணவர் அவரை மருத்துவமனையில் சேர்த்த செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னிமலை வனப்பகுதியில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக இருந்தார். இவருக்கு திடீரென கை, கால்கள் வீக்கம் கண்டன.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டிய நிலை.ஆனால் மருத்துவமனைக்கு பத்தனம்திட்டாதான் வர வேண்டும். அது மலைப் பகுதியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வாகன வசதியும் கிடையாது.
இதையடுத்து தனது மனைவியை தூக்கிக் கொண்டு மலையிலிருந்து வேகமாகஇறங்கத் தொடங்கினார் ஐயப்பன். மழை வேறு பலமாக பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் தனது மனைவியைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக மலையிறங்கினார் ஐயப்பன். கிட்டத்தட்ட 10மணிநேரம் பயணம் செய்து மனைவியை பத்தனம்திட்டா மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்து ஐயப்பனின் மனைவிக்கு உடனடியாக டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர். ஆனால் குழந்தை இறந்து விட்டது. ஐயப்பனின் மனைவி மட்டும் உயிர் பிழைத்தார்.
மருத்துவமனையில் தற்போது தொடர் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை அறிந்தும், ஐயப்பனின் இந்த பாசச் செயல் குறித்தும் அறிந்தும் பலரும மருத்துவமனைக்கு வந்து ஐயப்பனைப் பாராட்டினார். அவருக்கு நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன.