புகார் மீது எப்.ஐ.ஆர் போட மறுக்கும் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்!... சர்ச்சை
டெல்லி: பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இது போலீசார் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
நாடெங்கும் பல்வேறு குற்றங்கள் குறித்தான புகார்களை வாங்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிப்பில் போலீசார் எல்லைப் பிரச்சினையால் மெத்தனமாக செயல்பட்டனர். மேலும் வழக்குபதிவு செய்ய மறுத்ததுடன் விசாரணை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இது மட்டுமல்லாது மார்ச் மாதம் கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட போதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் பெற்றோரை அலைக்கழித்தனர். சிறுமி உடல்நிலை மோசமான பின்னர்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பொதுமக்கள் போராட்டத்துக்குப் பின் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
இதுபோல் கற்பழிப்பு விபத்து உள்ளிட்ட காலங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக மனித உரிமைகள் அமைப்புகளும் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி, அனைத்து மாநில அரசுகளுக்கும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு ஆணோ, பெண்ணோ பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல் குற்றம் நடந்தது வேறு இடமாக இருந்தாலும் அது தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி அல்ல என்று போலீசார் புகாரை பெற மறுக்ககூடாது, புகார் மீது ஜீரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்து அதை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எப்.ஐ.ஆர். போடுவதில் தாமதம் ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அவதி ஏற்படுத்துவதுடன் குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடும். மாநில அரசுகள் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அவ்வாறு எப்.ஐ.ஆர். போட மறுத்தால் அது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது. எப்.ஐ.ஆர் போட மறுக்கும் போலீசார் மீது இந்திய தண்டனைச்சட்டம் 166 ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.