ஐபிஎல் பெட்டிங்: விசாரணை முடியும் வரை ராஜ் குந்த்ரா சஸ்பெண்ட்
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்ரா பெட்டிங்கில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த வாரம் டெல்லி போலீசார் இது குறித்து அவரிடமும், அவரது நண்பரும், வர்த்தக பார்ட்னருமான உமேஷ் கோயன்காவிடமும் 12 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் விசாரணை முடியும் வரை ராஜ் குந்த்ரா அனைத்துவிதமான கிரிக்கெட் விவகாரங்களில் ஈடுபட தடைவிதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். ஆதாரங்கள் கிடைத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தடை விதிக்கலாமா என்று வாரியம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குந்த்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் வைத்திருக்கும் 11.7 சதவீத பங்குகளை கட்டாயப்படுத்தி விற்க வைக்க அணியின் பிற உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.