மரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ தெரியுமா உங்களுக்கு...?
கடலூர்: நாம் சுவாசித்து வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனைத் தருகின்றன மரங்கள் என்பது நாமறிந்த அறிவியல் தான். ஆனால், ஆண்டொன்றுக்கு மரமொன்று எவ்வளவு ஆக்ஸிஜனைத் தருகிறது என்று நான் என்றாவது யோசித்திருக்கிறோமா?
ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் கிட்டத்தட்ட 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறதாம். இதை ராமாபுரம் கிராஅமத்து மாற்று மேலாண்மை சிறப்பு மையம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தில் மரங்களின் மகிமை குறித்து பேசும் போது, சிஇசி அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தயாநிதி தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழலில் மரங்களின் பங்கு என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுகையில், 'ஒரு மரம் ஆண்டுக்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஓராண்டிற்கு கிடைக்கும் ஆக்சிஜன் 18 மனிதர்களின் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது. 2.6 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.
நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். எனவே, கிராம மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்' எனக் கூறினார்.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் தரணிதரன் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளை சமுதாய ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் மற்றும் கிராம ஆர்வலர் தனசேகரன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.