திருச்சி சிறையில் உண்ணாவிரதம்.. பாமகவினர் போராட்டத்தை கைவிட அன்புமணி வேண்டுகோள்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச்சட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியைச்சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறை களில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 24 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
திருச்சி மத்திய சிறையில் துணைப் பொதுச் செயலாளர் அகோரத்தை தனிமை சிறையில் அடைப்பதை கைவிட வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியினரை மற்ற கைதிகளுடன் ஒன்றாக அடைத்து வைப்பதை தவிர்க்க வேண்டும், உணவு, குடிநீர் வழங்குவதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆலயமணி, அகோரம், மாவட்ட செயலாளர் ம.கா.ஸ்டாலின், வன்னியர் சங்க துணைத்தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பாட்டாளிமக்கள் கட்சி நிர்வாகிகள் 24 பேரும் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நிலை இன்று மோசமடைந்ததைத் தொடர்ந்து பலருக்கு குளுக்கோஸ் செலுத்தப் பட்டு வருவதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த அடக்குமுறைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்திக் கொள்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் துடிப்பு மிக்க நிர்வாகிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே திருச்சி மத்திய சிறையில் அடக்குமுறைகளை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பா.ம.க.வினர் அனைவரும் தங்களின் போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.