துறையூரில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கோஷ்டி மோதல்
திருச்சி: துறையூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டாதல் அங்ரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளை கட்சியினர் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டியில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஆதரவாளர்கள் தனித்தனியே 90 அடி நீளத்தில் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
கருணாநிதி பிறந்தநாள் அன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திமுக தலைவரிடம் வாழ்த்து பெற சென்னை சென்றிருந்தனர். அப்போது செல்வராஜ் ஆதரவாளர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இதனை கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிலர் தடுத்துவிட்டனர். இருப்பினும் செல்வராஜ் தரப்பினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி விழாவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி கொப்பம்பட்டியில் 90 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் செல்வராஜ் வழங்குவார் என அறிவித்தனர். இந்த விழாவை நடத்தக் கூடாது என கே.என்.நேரு ஆதரவாளர்கள் திமுக கொடிகளை அகற்றி மேடையை அப்புறப்படுத்தினர். இதனால், இரு தரப்பும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது.
இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் விழாவை நடத்த போலீஸ் தடை விதித்தனர். மேலும் செல்வராஜ் கொப்பம்பட்டிக்கு வரக் கூடாது என போலீஸ் தடையும் போட்டது.
இதனையடுத்து செல்வராஜ் ஆதரவாளர்களன திமுக பொதுக்குழு உறுப்பினர் எரகுடி சங்கர், கொப்பம்பட்டி கிளை செயலாளர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கொப்பம்பட்டி மற்றும் ஈச்சம்பட்டியில் எளிமையான முறையில் பயனாளிகளுக்கு சேலை வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்தனர். இதனையடுத்து, திமுகவில் நடைபெற இருந்த பெரும் மோதல் தடுக்கப்பட்டது.