பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!
சென்னை: பொட்டு அம்மான் உயிரோடு தன் உறவினர்களுடன் நலமாக உள்ளார். இதோ அவரது இப்போதைய புகைப்படம் என சில இலங்கைத் தமிழர் தளங்கள் இரு படங்களை வெளியிட்டுள்ளன.
ஆனால் அவை புதுப் படங்கள் அல்ல.... 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. ஈழ அரசியல் வியாபாரிகள் கிளப்பும் வதந்தி என ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லி வருகிறது. ஆனால் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
எனவே பிரபாகரன் உள்ளிட்டோரின் இருப்பு அல்லது இறப்பு என்பது இன்றுவரை யார் சொல்வதையும் நம்ப முடியாத அளவுக்குப் போய்விட்டது.
அவ்வப்போது பிரபாகரன் ஏதோ ஒரு தீவில் இருப்பதாக செய்தியை பரவ விடுவதும், அவரது லேட்டஸ்ட் படம் என்று சில படங்களை வெளியிடுவதும் சிலரது வழக்கம். ஆனால் கொஞ்ச நாளில் எல்லாம் அடங்குவதும், மறுபடி செய்தி கிளம்புவதுமாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பொட்டு அம்மானின் இரு புகைப்படங்களை வெளியிட்டு. அவர் குடும்பத்தினருடன் உயிரோடு வெளிநாட்டில் இருப்பதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்தப் படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்றும், 2003-ல் அமைதிக் காலத்தில் தன்னைப் பார்க்க வந்த போராளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் பொட்டு அம்மான் எடுத்துக் கொண்ட படங்கள் இவை என்றும் இப்போது தெரியவந்துள்ளது.
"போராளித் தலைவர்கள் இருப்பது இல்லாதது குறித்து அவர்களுடன் இருந்த முக்கியமானவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்தக் காலத்திலும் தகவல்களைக் கசியவிடமாட்டார்கள். இப்போது இப்படியெல்லாம் பொய்த் தகவல்களைப் பரப்புவது காட்டிக் கொடுக்கும் யுக்தியாகத்தான் இருக்கும்", என்று ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.