வீர வாஞ்சி நாதன் மணிமண்டபம் முட்புதராக மாறிய சோகம்... முதல்வர் திறக்க கோரிக்கை
தென்காசி: வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு முழுமையடைந்தும் திறப்பு விழா காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முட்புதராக மாறி வரும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை அவரது நினைவு நாளுக்கு முன்பாக திறக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட வேண்டும் என்று சுதந்திர போராட்ட தியாகிகளும் அவர்கள் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் வாஞ்சிநாதன் 1886ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார். சுதந்திர போராட்டத்தின் போது திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.
ஆஷ் துரை கொலை
1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் இருந்த வாஞ்சி நாதன், புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.
திமுக ஆட்சியில்
வீர வாஞ்சி நாதனின் வீர தியாகத்தை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் ரூபாய் 50 இலட்சம் ஒதுக்கீடு செய்து மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி தற்போது முடிக்கப் பட்டு திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருக்கிறது.
முட்புதராக மாறிய அவலம்
இந்நிலையில் அவரது மணிமண்டப வளாகத்தில் முட் புதர்களும் நிறைந்துள்ளன. கால் நடைகளும் சுற்றி திரிகின்றன. ஜூன் 17.ம் தேதி அவரது 102வது நினைவு நாள் வரும் நிலையில் அதனை தமிழக முதல்வர் திறந்து வைப்பாரா என்று இப்பகுதி மக்களும் தியாகிகள் குடும்பத்தினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.