சின்ன ரெஸ்ட்டுக்குப் பின் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக களம் இறங்குகிறார் 'வீரப்பன்' விஜயக்குமார்!
விஜயகுமார் ஐ.பி.எஸ் தலைமையிலான அதிரடிப் படைதான் தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் இருந்த வீரப்பனை 2004 ம் ஆண்டு சுட்டுக் கொன்றது. இதனையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார்.
2010-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆன விஜயகுமார் 2012ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வரும் விஜயகுமாரை தற்போது மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக அவர் நியமிக்கப்பட உள்ளார்.
சமீபத்தில் சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் பலியானார்கள். தாக்குதலில் குண்டு காயம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா 18 நாட்களுக்கு பிறகு நேற்று மரணம் அடைந்தார்.
சத்தீஷ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பரவி வருகிறது. மாவோயிஸ்டுகள் பிரச்சினையால் தலைவலியை சந்தித்து வரும் மத்திய அரசு அவர்களை முற்றிலுமாக ஒடுக்க முடிவு செய்துள்ளது.
எனவே தான் வீரப்பனை சுட்டுக் கொன்ற விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பினை வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஏற்கனவே விஜயகுமாரை உள்துறை அமைச்சக பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால் அவருக்கு ஜார்க்கண்ட் கவர்னரின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.