சிங்கப்பூரில் விபச்சார விடுதியில் எடுபிடியாக வேலை பார்த்த தமிழக இரட்டையர்களுக்கு சிறை
சிங்கப்பூர்: தமிழகத்தைச் சேர்ந்த ராமன் செல்வராஜ், லட்சுமணன் செல்வராஜ் ஆகிய இரு இரட்டையர்கள், சிங்கப்பூரில் விபச்சார விடுதியை நிர்வகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார் லட்சுமணன். அங்கு பாலமுருகன் செல்வம் பன்னீர் என்பவரைச் சந்தித்தார். பாலமுருகன் இந்தியாவிலிருந்து வேலைக்காக பெண்களை எடுத்து அவர்களை தவறான வழியில் பயன்படுத்தி வருபவர். பாலமுருகனிடம் வேலைக்காக சேர்ந்த லட்சுமணன், பாலமுருகனிடம் பணியாற்றி வந்த விபச்சாரப் பெண்களுக்கு சாப்பாடு வாங்கித் தருவது, அவர்களது கஸ்டமர்களிடமிருந்து பணம் வசூலித்துத் தருவது போன்ற வேலைகளைச் செய்துள்ளார்.
இதை பாலமுருகனிடம் கொடுப்பார் லட்சுமணன். அவர் லட்சுமணனுக்கு சம்பளம் போல ஒரு தொகையைத் தருவார். பின்னர் இந்தியாவிலிருந்து தனக்கு பெண்களை சப்ளை செய்யும் நபருக்கும் ஒரு தொகையை அனுப்பி வைப்பார் பாலமுருகன்.
பின்னர் லட்சுமணனுடன் அவரது தம்பி ராமரும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவர் உள்பட மொத்தம் 5 பேரை கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இருவருக்கும் 26 வயதாகிறது. இவர்களை போலீஸார் கைது செய்தபோது அபராதம் விதித்து கோர்ட்டில் விட்டு விடுவார்கள் என நினைத்திருந்தனர். ஆனால் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவர்களிடம் பணியாற்றி வந்த 6 விபச்சாரப் பெண்களையும் போலீஸார் மீட்டுக் கைது செய்தனர். அவர்கள் மூலமாக கடந்த 2 மாதங்களில் ரூ. 30,000 வரை சம்பாதித்ததாக லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோர்ட்டில் நிறுத்தப்பட்ட ராமரையும், லட்சுமணனையும் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி மாதமே 5 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.