இனி, இஎம்ஐ-ல் வானத்தில் பறக்கலாம்: ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ அறிமுகம்
டெல்லி: விமான டிக்கெட்களையும் தவணை முறையில் பெறும் வசதியை ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ விமான சேவை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
தவணை முறையில் பொருட்களை வாங்கும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி நிறுவனங்களும் தங்களது பொருட்களை தவணை முறையில் விற்று லாபம் பார்க்கின்றன.
தவணை முறையில் பணம் திருப்பிச் செலுத்தப்படுவதால் வாடிக்கையாளருக்கும் சுமை குறைவதாக நினைப்பதே இந்தத் திட்டம் வெற்றி பெறக் காரணம் ஆகும்.
டிவி-ல ஆரம்பிச்சது...
முதலில் டிவி, பிரிட்ஜ் என எலெக்ட்ரானிக் பொருட்களில் தொடங்கிய இந்த வியாபார உத்தி படிப்படியாக பர்னிச்சருக்கு முன்னேறி, தற்போது எல்லாத் துறையிலும் இ.எம்.ஐ எனப்படும் தவணை முறைத்திட்டம் கொடி கட்டிப் பறக்கிறது.
விமான டிக்கெட்களும்...
தற்போது விமான டிக்கெட்களும் இதற்கு தப்பவில்லை. தவணை முறையில் பணம் செலுத்தி விமான டிக்கெட் பெறும் வசதியை ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ விமான சேவை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும்...
ஆனால், இந்த வசதியை கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போதைக்கு பயன் படுத்த முடியும். முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை இரண்டு தவணைகளாக சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு மூலமாகவே வங்கிக்கு திருப்பிச் செலுத்தலாமாம்.
வங்கி ஒப்புதல்...
இதற்காக ஒப்பந்தத்தை ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனம் எச்டிஎப்சி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றுடன் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.