பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ’சிறப்பு திட்டத்துக்கு’ ரூ600 மில்லியன் நிதி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மேற்கொள்ளப் போகும் சிறப்புத் திட்டத்துக்கு ரூ600 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ அமைப்பின் சிறப்பு திட்டங்களுக்காக அந்நாட்டு பிரதமர் உத்தரவின்பேரில் ரூ600 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு முதல் முறையாக கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.எஸ்.ஐ. மேற்கொள்ளப் போகும் சிறப்புத் திட்டம் எது என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் 37 தரைவழி கண்காணிப்பு ராடர்களை ரூ1.387 பில்லியனுக்கு வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்களில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பு மேற்கொள்ளப்போகும் செயல் திட்டம் ‘இந்தியாவை' இலக்கு வைத்துதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.