கருணாநிதியுடன் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவா?
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கருணாநிதியை சந்தித்தார். ஒருமணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
பிறந்தநாள் வாழ்த்து
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், கருணாநிதிக்கு 90 வது பிறந்தநாள் வாழ்த்து கூற வந்ததாக கூறினார்.பிறந்த நாள் சமயத்தில் வாழ்த்துக் கூற முடியவில்லை. எனவே தனிப்பட்ட முறையில் சந்தித்து வாழ்த்துக் கூறினேன் என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராஜ்யசபா தேர்தல் பற்றியோ, கூட்டணி பற்றியோ கட்சித்தலைவர் சோனியா காந்திதான் முடிவெடுப்பார் என்றார்.
ராஜ்யசபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக தலைவர் கருணாநிதியை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.