2012 ல் 38 லாக் அப் மரணங்கள்: அசாம் முதலிடம்
கவுகாத்தி: நாடுமுழுவதும் லாக் அப் மரணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் தான் லாக் அப் மரணம் அதிகம் நடைபெற்றுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளிகள் கொலை செய்யப்படுவது அதிகம் என ஆசியாவிற்கான மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. டார்ச்சர் இன் இந்தியா 2011 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் போலீசாரின் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் குற்றவாளிகள் விவரங்கள் குறித்து தேசிய குற்றப்பிரிவு அமைப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை படியுங்களேன்.
அசாம் முதலிடம்
2012-ம் ஆண்டில் லாக் அப் கொலைகளின் வரிசையில் அசாம் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்படி கடந்தாண்டு 11 குற்றவாளிகள் லாக் அப் கொலைகள் நடைபெற்றுள்ளன.
மரணங்கள் குறையவில்லை
அசாம் மாநிலத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிகளின் மீது தொடரப்படும் வழக்கு மற்றும் நீதிபதிகளின் விசாரணை போன்றவை முறையாக இருந்தாலும் லாக்அப் மரணங்களின் எண்ணிக்கை குறையவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 38
இதற்கு அடுத்தபடியாக ஆந்திரமாநிலம் ஐந்து கொலைகளுடன் இரண்டாவது இடத்தையும், மகராஷ்டிரா மாநிலம் நான்கு எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2011ல் ஆந்திரா நம்பர் 1
கடந்த 2011-ம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் லாக் அப் மரணம் குறித்து எவ்வித வழக்கும் பதிவுசெய்யப்பட வில்லை. அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் இது போன்ற மரணங்களின் எண்ணிக்கையில் 11 ஆகவும், மத்திய பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தையும், மகராஷ்டிரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
போலீஸ் அதிகாரிகள்
இந்நிலையில் தேசிய குற்றப்பரிவு அமைப்பின் அறிக்கை குறித்து மாநில உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில் இவ்வமைப்பின் அறிக்கையை மறுபரிசீலனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தாண்டுகளில் 14,213 மரணங்கள்
இதனிடையே கடந்த 2001முதல் 2010 ஆம் ஆண்டு கால கட்டங்ளில் சுமார் 14 ஆயிரத்து 231 பேர் இம்முறைப்படி பலியாகிஉள்ளதாகவும், இது நான்கு நபர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் லாக்அப் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக டார்ச்சர் இன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகம்
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறை மரணங்கள் அதிகளவில் நடந்துள்ளன. தேசிய குற்றப்பிரிவு ஆவண புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் நடந்த மொத்த லாக் அப் மரணங்களில் 23 சதவீதம் மரணங்கள் மகாராஷ்டிராவில் நடந்துள்ளனவாம்
சி.பி.ஐ விசாரணை தேவை
சிறை மரணங்கள் தொடர்பாக கடந்த பத்து ஆண்டுகளில் தொடரப் பட்ட வழக்குகளில் இதுவரை யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லாக் அப் மரணங்கள் பற்றி கருத்து கூறியுள்ள ஓய்வு பெற்ற டிஜிபி, இது போன்ற மரணங்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மாநில போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் குற்றவாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.