என்னைப் பழிவாங்கப் பார்க்கிறார் ஜியா கானின் தாய்!
பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில், அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சூரஜ் பஞ்சோலியின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று மும்பை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், "ஜியா கான் ஜூன் 3-ம் தேதி தற்கொலை செய்தார். ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதிய கடிதத்தை கண்டுபிடித்த அவரது தாயார், அதனை தவறாக பயன்படுத்துகிறார். ஜியா கான் தற்கொலைக்கு முன்னர் அந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கடிதத்தை எனக்கு எழுதவில்லை. எனது பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. அவரது தாயார் என்னை பழிவாங்க முயற்சிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவிற்கு காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சூரஜ் பஞ்சோலியிடம் மேலும் பல தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த கோர்ட், சூரஜ் பஞ்சோலியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
சூரஜ் பஞ்சோலி தன்னைக் காதலித்து, செக்ஸ் வைத்துக் கொண்டு பின்னர் வேறு பெண்களுடன் தொடர்பு கிடைத்ததும் ஏமாற்றிவிட்டதாக தனது கடிதத்தில் ஜியா கான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
மேலும் ஜியா கானை தான் அடித்ததாகவும் போலீசில் சூரஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.