தென் மேற்குப் பருவ மழை- இதுவரை 28% உபரி மழை
டெல்லி: தென் மேற்குப் பருவ மழை ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுவரை 28 சதவீத அளவுக்கு உபரியாகவே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் மகிழ்ச்சித் தகவலை வெளியி்ட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பல மாதங்களாக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். காரணம், பருவ மழை பொய்த்ததால். விவசாயம் பாதிக்கப்பட்டதோடு உற்பத்தியும் பாதித்து, விலைவாசியும் விண்ணைத் தொட்டு விட்டது.
காய்கறிகள் பக்கம் போகவே முடியவி்ல்லை. சின்ன வெங்காயம் கெட்ட கேட்டுக்கு கிலோ 100 ரூபாய் என்று சொல்கிறார்கள். சமைக்கும்போது அழுது கொண்டே சமைக்கும் நிலையில் பெண்கள் உள்ளோம்.
இந்த நிலையி்ல சந்தோஷச் செய்தி ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது வழக்கத்தை விட அதிகமாகவே தென் மேற்குப் பருவமழை பெய்து வருகிறதாம்.
ஆரம்பமே அமர்க்களம்ப்பா
தென் மேற்கு பருவ மழையின் தொடக்கமே அமர்க்களமாக இருப்பதாக கூறுகிறது வானிலை மையம்.
வழக்கமான மழை
வழக்கமாக நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை மூலம் நமக்கு 98 சதவீத மழைப் பொழிவு கிடைக்கும். இந்த வருடம் அது முழுமையாக கிடைக்குமாம்.
2 வாரத்தில் 28 சதவீதம் எக்ஸ்ட்டிரா
சீசன் தொடங்கிய 2 வாரத்திலேயே 28 சதவீத உபரி மழை கிடைத்துள்ளதாம்.
78 சதவீத பகுதிகளில் உபரி மழை
36 உப கோட்டங்களின் 78 சதவீத பகுதிகளில் உபரி மழை பெய்துள்ளதாம்.
ஜூன் 1ல் 65 மில்லி மீட்டர்
மழைப் பொழிவு தொடங்கிய ஜூன் 1ம் தேதியன்று 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இது 50.6 மில்லிமீட்டராகத்தான் இருக்கும்.
ஜூலையில் 101 சதவீதமாகுமாம்
ஜூலை மாதத்தி்ல 101 சதவீத மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
ஆகஸ்ட்டில் குறையும்
அதேசமயம், ஆகஸ்ட் மாதம் மழைப் பொழிவு 96 சதவீதமாக குறைந்து விடுமாம்.
வட மேற்கு இந்தியாவில் குறைவுதான்
அதேசமயம், வட மேற்கு இந்தியாவில் மழைப் பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அங்கு குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது.