சென்னையில் அதிமுக கவுன்சிலரை தாக்கிய தேமுதிக செயலாளர் கைது
சென்னை: சென்னையில் அதிமுக கவுன்சிலர் மனோகரனை அடித்து உதைத்த தேமுதிக செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பள்ளிக்கரணை ஜல்லடையான் பேட்டை 197வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மனோகரன். அதிமுகவைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேமுதிக செயலாளர் பத்மநாபன். அவர் மாநகராட்சி தேர்தலில் மனோகரனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர்களிடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மனோகரன் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபனுக்கும், மனோகரனுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.