’ஒட்டகத்தை காப்பாற்றுங்கள்...’: புகாரை வாங்க மறுத்த போலீஸ்
விருதுநகர்: விருதுநகரில் ஒட்டகங்கள் துன்புறுத்தப் படுவதாக, விலங்குகள் நல அமைப்பினர் வழங்கிய புகாரை,போலீசார் வாங்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி அருகே, இரண்டு பேர், 2 ஒட்டகங்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதைக் கண்ட பொதுமக்கள், விலங்குகள் நல அமைப்பிற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த விலங்குகள் நல அமைப்பினர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போதே, ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றொருவரை மட்டும் பிடித்து, விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் ஒப்படைத்தனர் விலங்குகள் நல அமைப்பினர்.
மேலும், ஒட்டகங்களை அவர்கள் வதைப்பதாக, போலீசாரிடம் புகார் வழங்கினர். ஆனால், அப்புகாரை வாங்க போலீசார் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
விலங்குள் நல அமைப்பை சேர்ந்த சுனிதா கிறிஸ்டி இச்சம்பவம் பற்றி கூறுகையில், 'நாகர்கோவிலில் இருந்து விருத்தாச்சலத்திற்கு, ஒட்டகங்களை நடத்தியே கொண்டு சென்றனர். அவர்களிடம் முறையான அனுமதியில்லை.
கோபால், 15, என்பவரிடம் இருந்து, 8 முதல் 10 வயதுள்ள 2 ஒட்டகங்களை கைப்பற்றினோம். பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தால், புகாரை வாங்க மறுத்து விட்டனர். எஸ்.பி., யிடம் புகார் செய்ய உள்ளோம்,'' என தெரிவித்தார்.