உத்தரகண்டில் நிலச்சரிவு: யாத்திரை சென்ற ஹர்பஜன் சிங் தவிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் 48 மணிநேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் உத்தரகாசி, தெஹ்ரி, ஹரித்வார் மற்றும் டேராடூன் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளம் மற்றும் மழைக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலமான ஹேம்குந்துக்கு சென்ற 20,000 யாத்ரீகர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் நடுவழியில் சிக்கியுள்ளனர். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை நதியின் துணை ஆறுகளான மந்தாகினி மற்றும் அலக்நந்தா ஆகியவை அபாய அளவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றன. ருத்ரபிரயாக் மற்றும் கௌரிகுந்தை இணைக்கும் பாலம் சேதம் அடைந்துள்ளது. மேசமான வானிலை காரணமாக கேதர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆறுகளுக்கு அருகே சிக்கிய யாத்ரீகர்கள் பத்திரமான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அம்மாநில அமைச்சர் யஷ்பால் ஆர்யா தெரிவித்தார். பல்வேறு இடங்களில் தொடர்மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி உள்ள கோவில்களுக்கு செல்லும் வழிகள் மூடப்பட்டுள்ளன.