கனிமொழியை வீழ்த்த தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க காங். முடிவு?
திமுகவுக்கே காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தேமுதிகவின் இந்த அட்டாக் அணுகுமுறை திமுக தரப்பில் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் இதுவரை அதிமுகவின் 4 வேட்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதியாகி விட்டது. 6வது இடத்திற்குத்தான் தற்போது போட்டி நிலவுகிறது.
திமுகவின் கனிமொழியும், தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியில் உள்ளனர். திமுகவிடம் 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேமுதிகவிடம் 22 பேர் உள்ளனர். வெற்றிக்குத் தேவை 34. அதேசமயம், அது கிடைக்காவிட்டால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுபவர் வெற்றி அடைவார்.
திமுக தரப்பில் காங்கிரஸ், பாமகவின் ஆதரவை ரகசியமாக கோரி வருவதாக தெரிகிறது. மேலும் சில எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், அதிரடியாக தேமுதிக குழு ஒன்று சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று விரைந்தது. அங்கு மாநிலத் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸிடம் கோரிக்கை வைத்தது. அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் சொல்லி அனுப்பியுள்ளார்.
தேமுதிகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்பே பேசி உறுதி பெற்ற பின்னர்தான் காங்கிரஸ் அலுவலகத்திற்கு தேமுதிகவினர் வந்ததாகவும் பேசுகிறார்கள். எனவே கனிமொழியின் வெற்றிக்கு ஆபத்து வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ஏற்னவே திமுக தங்களை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டதால் அதிருப்தியில் உள்ளனர். கனிமொழியின் 2ஜி விவகாரத்தை வைத்துத்தான் காங்கிரஸை ஓரம் கட்டியது திமுக.இந்த நிலையி்ல, அதே கனிமொழியை தேமுதிகவை வைத்து வீழ்த்துமா காங்கிரஸ் என்ற புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.