எங்கள் ஆதரவை திமுக கேட்கிறது .. அதிமுக கூட்டணி கட்சியான மனித நேயக் கட்சி தகவல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் எங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு திமுகவிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது என்று அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் குட்டிக் கட்சிகளுக்கு இப்போது கிராக்கியாகியுள்ளது. அவர்களது ஆதரவைப் பெற முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி திமுக தன்னிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூறியுள்ளது. இக்கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் முடிவெடுக்கவுள்ளனராம்.
இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜ்யசபா தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தஞ்சையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எங்களிடம் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர். கம்யூனிஸ்ட், தேமுதிக ஆதரவு கேட்கவில்லை.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. கூட்ட முடிவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று அறிவிக்கப்படும் என்றார் அவர்.